Sunday, July 7, 2013

கவிதை வரும் ..!

கவிதை வரும்


அழகாய்ச்சிறு குழந்தை

அருகமர்ந்து அன்பு காட்டி

ஐ லவ் யூ அங்கிள் என்றால்

ஆயிரமாய்க் கவிதை வரும்



காலையிளம் பரிதியைப்பார்

கடல் நீர் பார்; தென்னையிடை

பாளையிலே பனித்துளி பார்

பல நூறு கவிதை வரும்.



உழைக்கின்ற தோழர்கள்தம்

உடல் வியர்வை முத்தைப்பார்

களைப்பின்றிக் கழனி உழும்

கைகளைப்பார் ; கவிதை வரும்..!


குயில் பாட்டுப்பின்னொலிக்க

குலவையிட்டு வயல் நடுவே

மயில்தோகை விரித்திடவே

மழையெனவே கவிதை வரும்..!



இல்லத்தே ..கோயிலிலே

இருப்பதுவோ..இல்லையதோ

உள்ளத் துறைஇறைவன் உணர்

உடனடியாய்க்கவிதை வரும்..!



வாய்மொழியில் ..பயன்பாட்டில்..

வழக்கத்து உரை நடையில்..

தாய்மொழியின் சுவையுணர்த்து

தண்மழையாய்க் கவிதை வரும்..!

No comments:

Post a Comment